பதிவு செய்த நாள்
06
அக்
2021
09:10
சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட உள்ள 11 வெண்பட்டுக் குடைகளுக்கு சென்னை கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அக். 10ல் திருமலையில் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலைகள் தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள் என, இரண்டு வகையான மங்கலப் பொருட்கள், தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் திருமலை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி பிரம்மோற்ஸவத்தின்போது, திருமலை ஏழுமலையானுக்கு, ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், ஆண்டுதோறும் 11 வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.இந்த ஆண்டுக்கான திருக்குடை உற்ஸவம், அக். 3ல் யாக பூஜைகளுடன் துவங்கியது.சென்னை, பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில், 11 திருக்குடைகளுக்கும் நேற்று காலை 11:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, விஸ்வ ஹிந்து வித்யாகேந்திரா இணைப் பொதுச் செயலர் கிருஷ்ணமாச்சாரி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் செல்லமுத்து, தமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின்ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, திருக்குடை ஊர்வலம் தவிர்க்கப்பட்டுள்ளது.அக்., 9ல், திருச்சானுார் தாயார் கோயிலில் இரண்டு திருக்குடைகளும், அக்.10ல் திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒன்பது திருக்குடைகளையும், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி சமர்ப்பிக்க உள்ளார்.