திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நேற்று, ஒரு நிறைநாழி நெல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் தோன்றி கூறும் பொருட்களை வைத்து பூஜிக்கப்படுவது ஐதீகம். கடந்த மாதம், 3ம் தேதி முதல் வெள்ளியால் செய்த வில் - அம்பு வைத்து பூஜை நடந்து வந்தது. நேற்று, உத்தரவுப்பெட்டியில், நிறைநாழி நெல் வைக்கப்பட்டு பூஜை துவங்கியது. கொங்கூர் பகுதியை சேர்ந்த சிவராம் என்பவர் சார்பில், சுவாமியிடம் உத்தரவு பெற்று நிறைநாழியில் நெல் வைத்து பூஜை நடத்தப்பட்டது. மங்களகரமான நிகழ்வின்போது, நிறைநாழி வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். சிவன்மலை ஆண்டவர் கோவிலில், நிறைநாழி வைத்து பூஜிக்கப்படுவதால், ஒட்டுமொத்த வேளாண்மையும் செழிக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.