பதிவு செய்த நாள்
12
அக்
2021
01:10
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் மூன்று நாட்களுக்கு பின் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதித்ததால், பொதுவழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், இரு மாதத்திற்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்கமான நித்ய பூஜைகள் நடந்து வருகிறது.அந்த வகையில், மூன்று நாட்களுக்கு பின், நேற்று காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து பக்தர்கள் தரினசத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.தொடர் விடுமுறையால் நேற்று, மலைக்கோவிலில் காலை முதல்லே, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க குவிந்தனர். இதனால் பொது வழியில், பக்தர்கள் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.சில பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், மொட்டை அடித்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.