பதிவு செய்த நாள்
12
அக்
2021
03:10
புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று 5ம் நாள் சத சண்டி ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நவராத்திரியை முன்னிட்டு, 2வது ஆண்டாக இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில், கடந்த 7ம் தேதி முதல், சத சண்டி ஹோமம் நடந்து வருகிறது.5ம் நாளான நேற்று, அம்மன் மகேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 7:00 மணிக்கு கோபூஜையுடன் ஹோமம் துவங்கியது. தொடர்ந்து சுமங்கலிகள், கன்யா, வடு, தம்பதியர் பூஜைகளுடன், மதியம் 1.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. தினமும் 13 அத்யாயங்கள் பாராயணம் செய்து, ஒவ்வொரு அத்யாயம் பூர்த்தி செய்யும் நேரம் பூர்ணாஹூதி நடக்கிறது.ஒவ்வொரு பூர்ணாஹூதிக்கும் விசேஷ திரவியங்களுடன், 9 கஜம் புடவை சமர்ப்பிக்கப்படுகிறது. மஹா பூர்ணாஹூதிக்கு விசேஷ திரவியங்களுடன், 9 கஜம் பட்டுப்புடவை சமர்ப்பிக்கப்படுகிறது. யாகத்தை, சர்வசாதகம் கீதாராம சாஸ்திரி வழிகாட் டுதலில், அசோக் சாஸ்திரி நடத்தினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலையில் மூலமந்திர ஜபம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், இசைக்கச்சேரி, மகா தீபாராதனை நடைபெற்றது.இப்பூஜைகள் அனைத்தும் வரும் 15ம் தேதி வரை தினசரி நடைபெறும் என சமிதியின் தலைவர் ஸ்ரீநிவாசன், செயலாளர் சீதாராமன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.