பதிவு செய்த நாள்
13
அக்
2021
10:10
மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில் ஆறாம் நாள் நவராத்திரி விழா
நேற்று 12.10.2021, புரட்டாசி மாதம் 26-ம் நாள், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக சங்கரலிங்கம் சுவாமிக்கும், சங்கர நாராயணருக்கும், கோமதி அம்மனுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. ஆறாம் நாளான இன்று, கோமதி அம்மன், சந்தன காப்பு சாற்றி, சர்வ அலங்காரத்தில், அருள் பாலித்தார். பக்தர்கள், அம்மன் பாடல்கள், தேவாரம், திருவாசகம், பதிகங்கள் பாராயணம் செய்தனர். இன்றைய பூஜையில் குழந்தைகள், பெரியவர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேங்காய் சாதம், அபிஷேக பால், பஞ்சாமிர்தம், வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கோயில் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.