பதிவு செய்த நாள்
13
அக்
2021
03:10
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில், வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூடியிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. வரும், 15ம் தேதி விஜயதசமி வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாள்.எனவே, வெள்ளி அன்று கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்துாஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, மத்திய அரசின் வழிமுறைகளை அரசு அமல்படுத்துகிறது. முதல்வர் தலைமையில், இன்று நிபுணர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், கோவில்கள் திறப்பு பற்றி முடிவெடுப்பர், என்றார்.இதையடுத்து, அரசு முடிவெடுக்க உள்ளதால், நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.