பதிவு செய்த நாள்
13
அக்
2021
06:10
மேட்டுப்பாளையம்: ஆயுத பூஜையை முன்னிட்டு, வெளிமாவட்டங்களில் இருந்து, மேட்டுப்பாளையத்துக்கு, 12 டன் பல்வேறு வகையான பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 500 க்கும் மேற்பட்டவர்கள் மாலைகள் கட்டும் பணிகளில், ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுதபூஜை என்றாலே, பூக்கடை, பொரிகடலை வியாபாரிகள் சுறுசுறுப்பு அடைவர். இந்த இரு கடைகளில் தான் வியாபாரம் கனஜோராக நடைபெறும். ஆயுதபூஜை அன்று வாகனங்களை சுத்தம் செய்து, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து பூஜை செய்வது வழக்கம். சரஸ்வதி பூஜை அன்று, வீடுகளை சுத்தம் செய்து, பாடப் புத்தகங்களையும், சுவாமி படங்களையும் வைத்து, பூஜை செய்வது வழக்கம். இந்த இரு நாட்கள் நடைபெறும் பூஜைகளுக்கும், பூ மாலைகளும், பொரிகடலையையும், மக்கள் அதிகம் வாங்குவர். மேட்டுப்பாளையம் நகரில், 50 க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாகனங்களுக்கு கட்டும் பூமாலைகள், வரிசையாக கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. சுவாமி படங்களுக்கும், பெயர் பலகைகளுக்கு போடுவதற்காக சிறிய பூ மாலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளன.
இது குறித்து பூ வியாபாரி ரகுபதி கூறியதாவது: ஆயுத பூஜையை முன்னிட்டு, செவ்வந்தி, அரளி, மல்லிகை, செண்டுமல்லி, கோழிக்கொண்டை, முல்லை, சம்பங்கி ஆகிய பூக்கள் வாங்கப்பட்டுள்ளன. சேலம், ஓசூர், ராயக்கோட்டை மற்றும் மைசூர் ஆகிய ஊர்களிலிருந்து, பல்வேறு வகையான, 12 டன் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு கிலோ செவ்வந்தி, 320 ரூபாய்க்கும், அரலி, 400, மல்லிகை, 1,000, முல்லை, 800, சம்மங்கி, 300, செண்டுமல்லி, 100, கோழிக்கொண்டை, 50 ரூபாய்க்கு என விற்கப்படுகிறது. இந்த ஆயுத பூஜையை முன்னிட்டு, பூமாலை கட்டும் பணிகளில் 500 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். வழக்கமாக பூக்கட்டும் தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு தினம், 500 ரூபாய் கூலி வழங்கப்பட்டது. தற்போது இரவு பகலாக பூமாலை கட்டும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு, 2000 ரூபாய் கூலி வழங்கப்பட உள்ளது. மூன்று நாள் வியாபாரத்தில், வாங்கிய பூக்களை மாலைகளாக கட்டி, விற்பனை செய்யும் பணிகளில், அனைத்து வியாபாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வியாபாரி ரகுபதி கூறினார்.