நாகர்கோவில்: நவராத்திரி விழாவின் நிறைவாக நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை நடத்தினார்.இங்கு கடந்த ஒன்பது நாட்களாக நவராத்திரி விழா தினமும் அம்மன் பவனி மற்றும் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.
பத்தாம் நாள் விழாவான நேற்று பரிவேட்டை நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் துவங்கியது. பவனி கோயிலின் வெளியே வந்ததும் போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.பின்னர் ஊர்வலம் பஞ்சலிங்கபுரம் சென்று பரிவேட்டை நடத்திய பின்னர் நள்ளிரவில் அம்மன் கோயிலுக்கு திரும்பினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.