பதிவு செய்த நாள்
19
அக்
2021
04:10
சிவகாசி: கோயில்களில் வழக்கமான நேரங்களில் நடை திறக்க , சுவாமி கும்பிட தமிழக அரசு அனுமதி வழங்கியும் சிவகாசி சிவன் கோயிலில் நடைமுறைகள் பின்பற்றப்படாமல் தாமதமாக திறக்கப்பட்டதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் சிவன் கோயில் உள்ளது. கொரோனா தொற்றினால் தமிழகம் முழுவதுமே கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று நடை திறக்கவும் , சுவாமி கும்பிடவும் அரசு தடை விதித்திருந்தது. மற்ற நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் நடை திறக்க்கவும் சுவாமி கும்பிடவும் அரசு உத்தரவிட்டிருந்தது . இது அனைத்து கோயில்களிலும் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் அனைத்து கோயில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு வழக்கமான நேரங்களிலேயே நடை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது . இவை அனைத்துமே சிவகாசி சிவன் கோயிலில் கடைப்பிடிக்கப்படவில்லை. இங்கு வழக்கமாக காலை 5:45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:00மணிக்கு மூடப்படும். பின்னர் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு மூடப்படும். கொரோனா தொற்றினால் இந்த நேரங்கள் மாற்றப்பட்டு காலை 7:00 முதல் பகல் 11:30 மணி வரையிலும் மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் கோயில் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து தடைகளும் நீங்கிய பின்னரும் இங்கு வழக்கமான நடை திறக்கும் இல்லை. நேற்று காலை 7:30 மணி வரை கோயில் திறக்கப்படாததால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதே போல் மாலையும் தாமதமாகவே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசு உத்தரவு தெரிந்தும் அதனை கடைபிடிக்காமல் இங்கு உள்ள அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு செயல்படுவதாக பக்தர்கள் புலம்புகின்றனர். மன நிம்மதிக்காக சுவாமி கும்பிட வந்த அவர்கள் நிம்மதியின்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மலர்விழி, பா.ஜ., மாவட்ட துணை தலைவர், மற்ற கோயில்களில் எல்லாம் அரசு உத்தரவிட்ட பின்பு வழக்கமாக நடை திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ஆனால் சிவகாசி சிவன் கோயிலில் மட்டும் பழைய விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். அங்குள்ளவர்களிடம் கேட்டால் அதிகாரிகள் எங்களுக்கு எந்தவித உத்தரவும் கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் பக்தர்கள் மன நிம்மதியின்றி செல்கின்றனர். ஆறுமுகச்சாமி, பா.ஜ., ஊடகப்பிரிவு செயலாளர், காலை 5:45 மணிக்கு நடை திறக்கப்பட வேண்டிய கோயிலில் 7:30 மணி வரை திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேறு வழியின்றி கோயில் முன்பாக வெளியில் நின்று சுவாமி கும்பிட்டனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை என்று கூறுகின்றனர். வெள்ளைச்சாமி , சிவன் கோயில் செயல் அலுவலர், கோயிலில் சுவாமிக்கு அலங்காரம் முடியும் வரை அடைக்கப்பட்டிருந்தது. பின்னர் வழக்கம்போல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல்தான் மாலையும் அலங்காரம் முடிந்த பின்னர் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்றிலிருந்து வழக்கமான நேரத்தில் கோயில் நடை திறக்கப்படும்.