பதிவு செய்த நாள்
20
அக்
2021
10:10
பல்லடம்: அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தடையின்றி நடைபெற வேண்டி, பல்லடம் அருகே சிறப்பு பூஜை நடந்தது.
அயோத்தியில், ஸ்ரீராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி, பல்லடம் அடுத்த சின்ன கோடங்கிபாளையம் விநாயகர் கோவிலில், இந்து அதிரடிப்படை சார்பில் சிறப்பு வேள்வி பூஜைகள் நடந்தன. தேசிய செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ராஜகுரு, மாவட்ட செயலாளர் நந்தகுமார், ஒன்றிய செயலாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நந்தகுமார் கூறுகையில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணி எந்தவித தடையுமின்றி நடைபெற வேண்டி சிறப்பு வேள்வி பூஜை, மற்றும் யாத்திரை துவங்கியுள்ளது. இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று, அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அனுமன் ஜெயந்தி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றார். முன்னதாக, கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, மற்றும் வேள்வி நடந்தது. இந்து அதிரடிப்படை நிர்வாகிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.