திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்: 24ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2021 10:10
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று மாலை யாகசாலை பூஜை தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரக முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். ராகு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு காலத்தில் ரகுபகவானின் சிலைக்கு பாலபிஷேகம் செய்யும் போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது. இக்கோவில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது 5 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, வரும் 24ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று மாலை முதலாம் கால யாகசாலை பூஜை பூஜையுடன் துவங்கியது. இன்று (22ம் தேதி) இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நாளை (23-ம் தேதி) 4 மற்றும் 5 ம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 24ம் தேதி காலை 5 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மகாதீபாரதனை நடைபெறவுள்ளது.