பதிவு செய்த நாள்
22
அக்
2021
12:10
போடி, : மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தும்மிநாயக்கன்பட்டியில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வழிகாட்டுதலின் படி, எனது தலைமையில் திண்டுக்கல், நெல்லுார் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, தும்மிநாயக்கன்பட்டி கண்ணனுடன் தொல்லியல் சார்ந்த கள ஆய்வு மேற்கொண்டோம்.
பிற்கால பாண்டியர் காலத்தில் பேரையூரும், சுற்றியுள்ள பகுதியும் செங்குடிநாடு பிரிவின் கீழ் இருந்துள்ளது. பேரையூர் அருகே தும்மிநாயக்கன்பட்டி முனியப்பசாமி கோயிலில் இயற்கையாகவே அமையப்பட்ட பாறை ஒதுக்கு என்ற இடத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, வெள்ளை செங்காவி நிற பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மனித நாகரிகம் இல்லாத காலத்தில் அவர்களது வாழ்விடம் இயற்கையான குகைகளும், பாறை ஒதுக்குகளும்தான். தனது உணர்வுகளை கண்டு வியந்து, அஞ்சிய காட்சிகளையும், தான் வென்ற வெற்றிகளையும் ஒவியங்களாக வரைந்துள்ளனர்.
வெள்ளை நிற ஓவியம்: தட்டையான உடல் அமைப்புடன் தலை வட்டமாக மனித உருவ ஓவியங்கள் மிகவும் பழமையானதாகும். மனித உருவம் ஒன்று தனது இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, கால்களை விரித்து நின்று உள்ளது. மற்றொன்று தனது கைகளை நடனமாடுவது போன்று உள்ளது. வெள்ளை நிறத்தில் இரு புலியின் உருவங்களில் ஒன்று தனது காதுகளை உயர்த்தியும், மற்றொன்று வாலை உயர்த்தியபடி வரையப்பட்டுள்ளன.
கருப்பு நிற ஓவியங்கள்: ஒருவன் குதிரையில் அமர்ந்திருக்க, குதிரைக்கு கீழ் வட்டமான தலையுடைய மனிதன் தனது இரு கைகளையும் தொங்க விட்டு நின்றபடியும், மேல் பகுதியில் சில மனித உருவங்கள் அழிந்துள்ளது. புலிகளை வேட்டையாடி வெற்றியுடன் குதிரையில் வரும் வீரன் அல்லது இக்குடியின் தலைவனை வரவேற்கும் காட்சி ஓவியமாக வரையப்பட்டுள்ளன. கருப்பு வண்ணம் ஒரு வகையான மண்ணையும், விலங்கின் கொழுப்பு, ரத்தம் போன்றவற்றை பயன்படுத்தி வரைந்திருக்கலாம். இதனை முனியப்பசாமி என்ற பெயரில் மக்கள் வணங்கி வருகின்றனர், என்றார்.