திருநாகேஸ்வரம் (ராகு ) நாகநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2021 08:10
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலமான) நாகநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் 24ம் தேதி நடைபெறுகிறது.
திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமான நாகநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் உள்ள தனி சன்னதியில் ராகு பகவான் மங்கள ராகுவாக நாகவல்லி நாககன்னி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இக்கோவிலில் நாகநாத சுவாமியை பார்வதி மகாவிஷ்ணு பிரம்மா இந்திரன் சூரியன் சந்திரன் ஆகியோர் வழிபட்டு வேண்டிய வரங்களைப் பெற்றுள்ளனர். இந்த கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் மங்கல ராகு பகவானை வழிபட்டால் நோய் பாவம் ஆகியவை நீங்கி சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களது கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட இந்த கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வரும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு, 21 ஆம் தேதி மாலை 87 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்ட யாகசாலையில் முதலாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. யாகசாலை பூஜையும் போது சதுர்வேத பாராயணம், மூல மகா மந்திர ஜப பாராயணம் மற்றும் திருமுறை பாராயணம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை அய்யாவாடி தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களான பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார், திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், சீர்காழி சாம்பசிவ சிவாச்சாரியார் உள்ளிட்ட 200 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். 30 ஓதுவார்கள் தேவாரம் இசைத்தனர். மதுரையைச் சேர்ந்த ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் பன்னிரு திருமுறை பண்ணிசை பாராயணம் செய்தனர். தொடர்ந்து 24 ஆம் தேதி காலை ஆறாம் கால யாகசாலை பூஜையும், கடம் புறப்பாடும் செய்யப்பட்டு 10:30 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தில் குருமகா சன்னிதானங்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் இளையராஜா, நித்தியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர். நவகிரகங்களில் ராகு தலமான நாகநாத சுவாமி கோவிலின் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி அம்பாளின் திருவருளை பக்தர்கள் பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.