ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு சாற்றல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2021 09:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு, திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றும் வைபவம் நேற்றிரவு ஆண்டாள் கோவிலில் நடந்தது.
வருடம் தோறும் புரட்டாசி பிரம்மோற்சவம் ஐந்தாம் திருநாளில் திருமலை திருப்பதி ஏழுமலையான் சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு வஸ்திரம் கொண்டு செல்வது வழக்கம். இதற்கு எதிர்சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து பெருமாள் உகந்தனுப்பிய பட்டு ஆண்டாளுக்கு அனுப்பப்படும். அதன்படி இவ்வாண்டும் பட்டு, ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனை ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் நேற்று இரவு 7:10 மணிக்கு கோயில் வளாகத்தில் நடந்தது. இதனை முன்னிட்டு வெள்ளிக்குறடு மண்டபத்தில் ரெங்க மன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பட்டு சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளை அனிருத் பட்டர் செய்தார். பின்னர் சேவா காலம், தீர்த்த கோஷ்டி நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.