சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் 22 ம் தேதி இரவு (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீ சக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் துவங்கியுள்ளது. தொடர்ந்து தினமும் காலை மாலை சுவாமி வீதியுலா நடைபெறும். 30-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. 31 ம் தேதி சனிக்கிழமை பட்டு வாங்கும் உற்சவமும் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், நவம்பர் 1 ம் தேதி காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீ சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.