பதிவு செய்த நாள்
27
அக்
2021
11:10
பெங்களூரு : அனைத்து கோவில்களிலும் நவம்பர் 5ல் கோ பூஜை நடத்தி, பசுக்களை பாதுகாக்க வேண்டுமென ஹிந்து அறநிலையத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்று ஹிந்து அறநிலையத்துறை கோவில்களில் விஜயதசமி அன்று அரசு சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இந்த வகையில், ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் ரோகிணி சிந்துாரி புதிய உத்தரவு நேற்று பிறப்பித்தார்.அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:ஹிந்து மதத்தில் பசுக்களுக்கு தாய் ஸ்தானம் கொடுக்கப்படுகிறது.
கோமாதா, தாயே என்று நினைத்து பூஜிக்கிறோம். ஹிந்து மதத்தின் புராணத்தில் கோ மாதாவுக்கு சிறப்பு இடம் வழங்கப்பட்டுள்ளது.பசுக்களை பூஜிப்பதால் வாஸ்து பிரச்னை உட்பட பல பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கை சமூகத்தில் உள்ளது. பகவத் கீதை, பாகவத மஹாபுராணம் போன்றவைகளிலும் பசுக்களின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமீப காலமாக நகர வாழ்க்கைக்கு மாறியுள்ளதால், கோ பூஜை செய்வது பலரும் மறந்து விட்டனர். இந்நிலையில், ஹிந்து சனாதன மதத்தின் கோ பூஜை செய்யும் நடைமுறை கை விட கூடாது என்பதற்காக, நவம்பர் 5ல், அனைத்து கோவில்களிலும் கோ பூஜை நடத்தி பசுக்களை பாதுகாக்க வேண்டும்.அன்றைய தினம் மாலை 5:30 மணி முதல், 6:30 மணிக்குள், கோதுாலி சுப லக்னத்தில், பசுக்களை குளிப்பாட்டி, கோவில்களுக்கு அழைத்து சென்று, மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்து, அரிசி, வெல்லம், வாழைப்பழம் உட்பட இனிப்பு உணவுகளை வழங்கி கற்பூரம் காண்பித்து வணங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.