பதிவு செய்த நாள்
28
அக்
2021
11:10
ஊட்டி: பந்தலூர் அருகே குந்தலாடி மற்றும் பொன்னானி பகுதி மக்கள் பூ புத்தரி நிகழ்ச்சிக்காக கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு சென்று நெற்கதிர்களை சுமந்து வந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசித்து வரும் பனியர் சமுதாய பழங்குடி மக்கள் ஆண்டுதோறும், நெற்கதிர் அறுவடைக்கு முன்னர் ஐப்பசி 10-ம் நாள் பூ புத்தரி எனும் அறுவடை திருவிழா கொண்டாடி வருகின்றனர். இதில் குந்தலாடி, பொன்னானி, அம்மன்காவு, உப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமிழக பகுதியில் நெல் அறுவடை இல்லாத நிலையில், கேரள மாநிலம் வயநாடு இப்பகுதியில் வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள ஆலத்தூர் என்ற இடத்திற்கு சென்று, அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெற்கதிர்களை அறுவடை செய்து, பொன்னானி மகாவிஷ்ணு கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கே பழங்குடியின மக்களின் வாத்தியக் கருவிகள் இசைக்கப்பட்டு, விரதமிருந்த சந்திரன் என்பவர் தலை சுமையாக நெற்கதிர்களை கொண்டு வந்து, கோவில் குருக்களிடம் ஒப்படைத்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பழங்குடியின மக்கள் மற்றும் வயநாடன் செட்டி சமுதாய மக்களுக்கு அரச இலை மற்றும் நெற்கதிர்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குந்தலாடி பகவதி அம்மன் கோவில் கமிட்டி நிர்வாகிகள், பிரகாஷ், கோபாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ் மற்றும் பழங்குடியின சமுதாய தலைவர்களான செங்குட்டுவன், வாசு, வேலன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.