பதிவு செய்த நாள்
28
அக்
2021
04:10
பல்லடம்: பல்லடம் அருகே, பழமையான கல் தூண் ஒன்று காட்டு பகுதியில் கிடந்தது, வரலாற்று ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த அனுப்பட்டி - வெங்கிட்டாபுரம் செல்லும் ரோட்டில், பழமையான கோவில் கல் தூண் ஒன்று காட்டு பகுதியில் வீசப்பட்டுள்ளது. அவ்வழியாக வந்த வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு செய்து, அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வரலாற்று ஆர்வலர் பாண்டியன் கூறுகையில், சோழர் காலத்தின் பழம்பெருமை வாய்ந்த சிறப்புகள் பல்லடம் வட்டாரம் முழுவதும் ஏராளமாக உள்ளன. பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பல பொக்கிஷங்கள், தொல்லியல் துறையின் கவனக்குறைவால் அழிந்து வருகின்றன. அவ்வாறு, பல்லடம் அடுத்த அனுப்பட்டி அருகே, பழமை வாய்ந்த கல்தூண் ஒன்று ரோட்டோரத்தில் உள்ள காட்டு பகுதியில் யாரோ சிலர் வீசி சென்றுள்ளனர். படி வைத்து கல்தூண் குறித்து ஆய்வு செய்தோம். அதன்படி, அனுப்பட்டி கிராமத்தில், வரலாற்று சிறப்புமிக்க பழமையான கோவில் ஏதோ ஒன்று இருந்துள்ளது. கல்தூணில் விநாயகர், முருகன், வேல், மயில், பாம்பு, மற்றும் சில லிங்கத்தின் மீது பால் சுரக்கும் பசு உள்ளிட்ட சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், அனுப்பட்டி என்று ஊர் பெயரும்,
ஸ்ரீ ராம ஜெயம், ஜெகன்நாதன் என்ற பெயரும் இடம் பெற்றுள்ளன. இப்போதுள்ள கல் தூண்களில் இதுபோன்ற சிற்பங்களைப் பார்க்க முடியாது. எனவே, இது நூற்றாண்டுகள் பழமையான கல்தூணாக இருக்க வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட சிற்பங்களை கண்டறியவும், கோவில் குறித்து ஆய்வுகளையும் மேற்கொள்ளவும் தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.