பதிவு செய்த நாள்
28
அக்
2021
05:10
ஓசூர்: கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய தங்கத்தை, காணிக்கையாகத்தான் பார்க்க வேண்டும், என, அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள கோவில்களை பாதுகாப்பது குறித்த கண்காணிப்பு பணியை மேற்கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதைபோல், கோவில் திருப்பணிகளுக்கு, 1,000 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி, திருப்பணிகளை துவங்க வேண்டும். மேலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் கோவில்களை, அப்பகுதி மக்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். இந்து மதம், கடவுளை பற்றி விமர்சனம் செய்வோர் மீது, இந்து ஆலய பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளாக ஹிந்து சமய அறநிலையத்துறை தூங்கி கொண்டிருந்தது. இன்றும் பல ஊழல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அனைத்து சமுதாயத்தினர் அர்ச்சகராகலாம் என்பதை மையப்படுத்தி, மூன்று மாநிலங்களில் தை மாதம் ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்படும். கோவில்களுக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்தை உருக்கக்கூடாது. அதை காணிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். அதை தங்கமாக பார்க்கக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.