பதிவு செய்த நாள்
29
அக்
2021
11:10
பெரம்பலுார்: சிறுவாச்சூர் கிராமத்தில், உள்ள கோவில்களில் தொடர்ச்சியாக சாமி சிலைகள் சேதப்படுத்தும் சம்பவங்களை கண்டித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தக்கோரியும், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் இந்த ஒரு மாதத்துக்குள் பெரியசாமி கோவிலில் இரண்டு முறையும், பெரியாண்டவர் கோவிலில் ஒரு முறையும் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவங்களை கண்டித்தும், கோவில்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும், போதிய காவலர்களை நியமிக்க தவறிய கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாரை கண்டித்தும், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் நிர்வாக அலுவலகத்தை ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கோவில் பூசாரிகள் பக்தர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி முற்றுகையிட்டனர். தகவலறிந்த, பெரம்பலுார் தாசில்தார் கிருஷ்ணராஜ், பெரம்பலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், கோவில் நிர்வாக அலுவலர் அருள் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர். இனிமேல் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர் பின்னர், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு அளித்தனர்.