பதிவு செய்த நாள்
29
அக்
2021
06:10
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் விஜயநகர காலத்தை சேர்ந்த கர்நாடக பாணியில் அமைந்த 600 ஆண்டுகள் பழமையான 4 அடுக்கு ,2அடுக்குநிலை நடுக்கல்
கண்டறியப்பட்டதாக, கள ஆய்வில் ஈடுபட்ட எஸ்.பி.கே., கல்லுாரி பேராசிரியர் விஜயராகவன் ,மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: 4 அடுக்கு நிலை கல் 5 அடி உயரம், 1 அடி அகலம் கொண்டது. கல்லின் துாணின் இருபக்கமும் சிறிய சிற்பங்கள் , சிறிய அளவிலான புடைப்பு சிற்பங்களும் உள்ளன. நடுக்ககல்லில் லிங்கத்தை வணங்கும் வீரர், குதிரை மீது அமர்ந்துள்ள இருவீரன் சிற்பங்கள், இருபுறமும் மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கண்ணன், வீரர்கள் தங்கள் துணைவியரோடு இருக்கும் சிற்பங்கள், 4 பெண்களில் இருவர் சதி மேற் கொண்டனர் என்பதற்கு சான்றாக கையை மேலே உயர்த்திய நிலை சிற்பங்கள் காணப்படுகிறது. இதில் சூரியன், சந்திரன் உருவங்கள் உள்ளன. மற்றொரு நடுக்கல்லில் வீரன் பல்லக்கில் அமர்ந்த நிலையிலும் அதை 2 பேர் சுமந்தவாறு சிவலிங்கத்தை வணங்கியவாறு உள்ளது.மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தில் நடந்த உட்பூசல் போது உயிரிழந்த வீரர்கள், சதி மேற்கொண்ட வீரர்களின் துணைவிகள் நினைவை போற்றும் வகையில் 4 நிலை நடுக்ககல் அமைக்கப்பட்டு இருக்கலாம். தற்போது இந்த நடுக்கல்லை இங்குள்ளோர் கோணப்பன், கொண்டம்மன் என்ற பெயரிலும் வழிபடுகின்றனர், என்றனர்.