பதிவு செய்த நாள்
29
அக்
2021
06:10
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள அருள்மிகு விருந்தீஸ்வரர் கோவிலில், கோவை வடக்கு மாவட்ட காங்., கட்சியின் முன்னாள் தலைவர் மணி, தனது பிறந்தநாளை முட்டை கலந்த கேக் வெட்டி கொண்டாடியதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், துடியலூர் அருகே வடமதுரையில் விருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் உள்ள விஸ்வ நாயகி அம்பாள் சன்னதி முன்பு கடந்த, 27ம் தேதி கோவை வடக்கு மாவட்ட காங்., கட்சியின் முன்னாள் தலைவர் மணி, தனது பிறந்தநாளை கட்சியினருடன் இணைந்து, கேக் வெட்டி கொண்டாடினார். முட்டை கலந்த கேக்கை, கோவிலுக்குள் வைத்து வெட்டியது, ஹிந்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்தி கூறுகையில்," பழம் பெருமை வாய்ந்த அருள்மிகு விருந்தீஸ்வரர் கோவிலில் முட்டை கலந்த கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல் கோவிலின் புனித தன்மையை கெடுத்துவிடும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
இதுகுறித்து, கோவை வடக்கு மாவட்ட காங்., கட்சியின் முன்னாள் தலைவர் மணி கூறுகையில்," கடந்த பல ஆண்டுகளாக பொலிவு இழந்து கிடந்த, அருள்மிகு விருந்தீஸ்வரர் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தும் பணியில் பெரும் பங்காற்றி உள்ளேன். கோவிலின் புனிதத் தன்மையை கெடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. ஆர்வமிகுதியால் கட்சியில் உள்ள தொண்டர்கள் சிலர், கோவிலுக்குள் கேக்கை கொண்டு வந்து விட்டதால், அதை வெட்டும் நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் கோயிலுக்குள் நடப்பதை தவிர்ப்போம்" என்றார்.