பதிவு செய்த நாள்
31
அக்
2021
12:10
அலங்காநல்லுார் : மதுரை அலங்காநல்லுார் அருகே கிழவிகுளத்தில் இருந்து 5 கி.மீ.,ல் பச்சை வயல்வெளிகள் நடுவில் நம் வரலாற்று பொக்கிஷங்களை சுமந்தபடி சிதிலமடைந்த நிலையில் சிதறி கிடக்கிறது பிற்கால பாண்டியர்கள் கட்டிய கோயில்.
இக்கோயிலை ஆய்வு செய்த பாண்டியர்கள் தேடி பயணக்குழு ஆய்வாளர்கள் மணிகண்டன், விக்ரமன், பேச்சி, உதயகுமார், கோயில் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, கல்வெட்டு ஆய்வாளர் அறிவு செல்வம் கூறியதாவது: இக்கோயிலில் பழமையான செங்கல் கட்டுமானமும், அதனை அடுத்து கருங்கல்லால் கட்டப்பட்ட விமானம் இல்லாத கருவறை மற்றும் அர்த்தமண்டபமும் உள்ளது.கருவறை நிலைக்காலின் மேற்புறங்களை இணைக்கும் கல்லின் முன்புறம் நாராயண பெருமாள் என தமிழ் கல்வெட்டு இருக்கிறது. கோயில் முன்புறம் உள்ள ஆறு கால் மண்டபத்தில் பெரிய திருவடியுடன் கருடாழ்வார், சிறிய திருவடியுடன் ஆஞ்சநேயர் உருவங்கள் 4 அடி உயரத்தில் துாணில் செதுக்கப்பட்டுள்ளன. ராமர், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், சங்கு சக்கரம் என துாண்கள் முழுவதும் சிற்பங்கள் நிறைந்துள்ளன. கோயில் முன்புறம் பலிபீடம் உட்பட சிதைந்த நிலையில் பிற கட்டுமானங்கள் உள்ளன.பாண்டியர்களின் கட்டுமான கூறுகளான பாதபந்த அதிஷ்டானம், சிறிய அளவிலான நாகபந்தம், பாண்டியர்களின் சின்னமான செண்டுடன் கூடிய இரட்டை மீன்கள் போன்றவை இக்கோயில்பாண்டியர் காலகோயில் என உறுதி செய்கிறது என்றனர்.