கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு: ஆதி சங்கரர் சிலை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2021 12:11
டேராடூன் : உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக அங்கு ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார். உத்தரகண்டில் 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோவில் சேதம் அடைந்தது. கோவில் அருகே இருந்த ஆதி சங்கராச்சாரியார் சமாதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோவில் மற்றும் சமாதியை புணரமைக்கும் பணியை 500 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயரமும், 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி யோகிராஜ் செதுக்கி உள்ளார். இந்த சிலை உருவாக்கத்திற்காக 120 டன் கல் கொண்டுவரப்பட்டு, 2020 செப்டம்பரில் சிலை செதுக்கும் பணி துவங்கியது. ஆதி சங்கரரின் அமர்ந்த நிலையிலான இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.,05) திறந்து வைத்தார். முன்னதாக அங்குள்ள தேவ மந்திரங்கள் முழங்கிட சிவன் மற்றும் நந்தி சிலைகளுக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.