பதிவு செய்த நாள்
05
நவ
2021
12:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், காப்பு கட்டுதலுடன், கந்தசஷ்டி விழா துவங்கியது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், கந்தசஷ்டி விழா மற்றும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவிலில், காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜையும், 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 7:00 மணிக்கு, புண்ணியாகம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இறை அனுமதி பெறப்பட்டது. காலை, 9:15 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, அரோகரா கோஷங்களுடன், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதனையொட்டி, மருதமலையில், நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி, வரும், 9ம் தேதி, பகல், 2:30 மணிக்கு நடக்கவுள்ளது.