பதிவு செய்த நாள்
06
நவ
2021
04:11
தொண்டாமுத்தூர்: கோவை, ஈஷாவில் உள்ள ஆதியோகி முன், மலைவாழ் மக்கள் தங்களின் பாரம்பரிய இசையை இசைத்து, நடனமாடி தீபாவளி கொண்டாடினார்.
கோவை ஈஷா யோகா மையத்தையொட்டி, மடக்காடு, முள்ளங்காடு, தாணிக்கண்டி, பட்டியார் கோவில்பதி, பச்சான் வயல்பதி, பெருமாள் கோவில்பதி, நல்லூர்பதி, சீங்கபதி, வெள்ளப்பதி, சாடிவயல் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இம்மலை கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள், ஈஷா யோக மையத்தில், தங்களின் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினர். தாம்பூல தட்டுகளை ஏந்தி, சர்ப்பவாசலில் இருந்து மலைவாழ் மக்கள் ஆதியோகி வரை ஊர்வலமாக நடந்து வந்தனர். ஆதியோகி முன், மலைவாழ் மக்கள் தங்களின் பாரம்பரிய இசையை இசைத்து, நடனமாடி மகிழ்ந்தனர். நேற்றுமுன்தினம் அமாவாசை தினம் என்பதால், யோகேஸ்வர லிங்கம் மற்றும் சப்தரிஷிகளுக்கு, பூ மற்றும் பழங்களை அர்ப்பணித்து பூஜை செய்து வழிபட்டனர். தீபாவளி தினத்தையொட்டி, தொண்டாமுத்தூர் வட்டாரத்திலுள்ள பல்வேறு கிராமங்களில், ஈஷா தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.