சூலூர் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2021 04:11
சூலூர்: சூலூர் வட்டார முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சூலூர், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் சென்னியாண்டவர் கோவில், செஞ்சேரிமலை உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள் உள்ளன. அறுபடை முருகன் கோவில், சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், கந்த சஷ்டி விழா நேற்று காலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்பு கட்டி கொண்டனர். வரும், 9 ம்தேதி மாலை அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹார விழா நடக்கிறது. 10 ம்தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.