பதிவு செய்த நாள்
09
நவ
2021
09:11
நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்,கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு,திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக,சிங்காரவேலவர் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் போது,முருகப்பெருமானின் மேனியெங்கும் வியர்க்கும் மகிமை நடந்தது.
நாகை அடுத்த சிக்கலில்,அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது.முருகப்பெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு,இக்கோவிலில் தான்,முருகப்பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி,திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இக்கோவிலில் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.கொரோனா தொற்று காரணமாக 2 வது ஆண்டாக கோவிலில் நடைபெறும் வேல்வாங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. நேற்று காலை சிக்கல் சிங்கார வேலவர், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்துாரில் இன்று சூரனை சம்ஹாரம் செய்வதற்காக நேற்றிரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக,திருத்தேரில் காத்திருந்த முருகப்பெருமான் ஆவேசத்துடன் கோவிலுக்குள் வந்து,அன்னையிடம் சக்திவேல் வாங்கும் போது ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். அன்னையிடம் சக்திவேலை பெற்று தமது சன்னதியில் அமர்ந்த முருகப்பெருமானுக்கு,மானிடருக்கு வியர்ப்பது போன்று திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது.முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் சன்னதியின் சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.