நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழாவை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில். கார்த்திகை மாத முதல் சோம வார விழா நடந்தது. இதனையொட்டி மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீர்,விபூதி ,சந்தனம், புஷ்பம் ,இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. முன்னதாக காலை கோவில் வளாகத்தில் 108 சங்குகளில் தாமரையில் சிவன் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டது. மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் 1008 சங்குகள் மற்றும் மலர்களைக் கொண்டு சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. 1008 சங்குகளுக்கு முன் யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பூஜையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.