பதிவு செய்த நாள்
04
ஜூலை
2012
10:07
காங்கேயம்: சென்னையை சேர்ந்த பக்தருக்கு, ஆண்டவன் கொடுத்த உத்தரவின் பேரில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், "ஆண்டவன் உத்தரவு பெட்டியில், பட்டு வேட்டி, துண்டு ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவவாக்கிய சித்தர் வழிப்பட்ட தலம். பிரசித்தி பெற்ற இம்மலைக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் சன்னிதானம் அருகே, "ஆண்டவன் உத்தரவு பெட்டி என்ற, பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, குறிப்பிட்ட ஒரு பொருளை அந்த பெட்டியில் வைக்குமாறு கூறுவார். அந்தப் பொருளை கோவில் நிர்வாகத்திடம் பக்தர் ஒப்படைப்பார். பக்தர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, கருவறையில் அந்தப் பொருளை வைத்து, சுவாமியிடம், பூ போட்டு உத்தரவு கேட்கப்படும். உத்தரவு சரியென வந்தால், பக்தர் கொண்டு வந்த பொருள், "ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை, அந்தப் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடக்கும். இப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் அல்லது அது சம்பந்தப்பட்ட தொழிலில் முதலில் சரிவும், பின்னர் ஏற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
துப்பாக்கி குண்டு வைத்த போது, கார்கில் போரும், அதைத் தொடர்ந்து நம் தேசத்துக்கு வெற்றியும் கிடைத்தது. மூன்றாண்டுக்கு முன் எலுமிச்சை வைக்கப்பட்டபோது, எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்தது. தேங்காய் வைக்கப்பட்டபோது, அதன் விலை உயர்ந்தது. தென்னங்கன்று வைக்கப்பட்டபோது, "யூரியோபைட் நோய் தாக்கப்பட்டு, தென்னை மரங்கள் அழிந்தன. நாட்டு சர்க்கரை வைத்தபோது, கரும்பு கொள்முதல் விலை, 1,800 ரூபாயாக உயர்ந்தது. நடப்பாண்டு ஜன., 13ல், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியன் கொண்டு வந்த, ஆற்று நீர் ஒரு சொம்பில் வைக்கப்பட்டது. அப்போது, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையும், பழவேற்காடு ஏரி, ஈரோடு அருகே காவிரியாற்றில் மூழ்கி பலர் பலியான சம்பவமும் நடந்தது. பருவமழையும் ஏமாற்றி வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்தது.ஜூலை 2 ல், இக்கோவிலுக்கு வந்த, சென்னை, அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன், பட்டு வேட்டியும், துண்டும் கொண்டு வந்தார். மூலவர் உத்தரவு கிடைத்ததால், "ஆண்டவன் உத்தரவு பெட்டியில், பட்டு வேட்டி, துண்டு வைக்கப்பட்டது. இதன் மூலம், திருமணம் அதிகமாக நடப்பதுடன், ஜவுளித் தொழிலும், பட்டுத் தொழிலும் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என, பக்தர்கள் கருதுகின்றனர்.