எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் எட்டீஸ்வரர் மூர்த்தி கோயிலில் பானு பிரதோஷம் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் நடந்தது.எட்டயபுரம் ஜோதிர் நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மகாகணபதி பூஜையுடன் பானு பிரதோஷம் துவங்கியது. புண்ணியா வாஜனம், கலச ஆவாகன பூஜை பஞ்ச சுத்த ஜெபம் பாராயணமத், ஹோமம், பூர்ணாகுதி உலகநலன் வேண்டி மகாசங்கல்பம் நடந்தது. அதிகார நந்திப்பகவான் நந்தீஸ்வரர், எட்டீஸ்வரமூர்த்தி சுவாமிகளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு அருகம்புல்மாலை சாத்தி சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்து நெய்தீபம் ஏற்றி வெல்லம் கலந்த அரிசி நிவேதனம் நடந்தது. பக்தர்கள் சோமசூத்திர பிரதட்சனம் செய்து வழிபட்டனர். சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்தது. நடராஜன் சன்னதி முன்பு சிறப்பு பன்னீர் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கூட்டுபிரார்த்தனை செய்தனர். சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் ஏக கால சிறப்பு தீபாராதனை நடந்தது. பட்டத்து விநாயகர் கோயில் ஸ்தாணிகம் சர்வஜாதகம் பரசுராம சுப்பிரமணியம் சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை சமஸ்தானம் மேனேஜர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.