பதிவு செய்த நாள்
01
டிச
2021
04:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் முடிந்து, அண்ணாமலையார் மலையிலிருந்து, மஹாதீப ராட்சத கொப்பரையை கீழே இறக்கி அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரக்கால் மண்படத்தில் வைத்து நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் இந்த தீபம், 40 கி.மீ., வரையுள்ள பக்தர்கள், தினசரி கண்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம் நிறைவுற்றது. தீப கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப சுடர் மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று, முதலில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பின் பக்தர்களுக்கு வழங்கப்படும்.