பதிவு செய்த நாள்
01
டிச
2021
05:12
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு கமாண்டோ பிரிவினர் ஆய்வு செய்தனர். தமிழகத்தில், மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக, விமான நிலையங்கள், முக்கிய கோவில்கள் என, மொத்தம், 148 இடங்கள் உள்ளன. இவ்விடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கமாண்டோ பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி., அமல்ராஜ் உத்தரவின்படி, எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையிலான, 15 பேர் கொண்ட குழுவினர், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று ஆய்வு செய்தனர். மலையில் உள்ள கோவில் என்பதால், தீவிரவாதிகள் ஏதேனும் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும், அதுபோன்ற சமயங்களில், எவ்வாறு மக்களை காப்பாற்றுவது என்பது குறித்தும், அதற்கான இடங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். அதன்பின், அறநிலை துறை துணை ஆணையர் (பொ) விமலா மற்றும் கோவில் பணியாளர்களுடன், கமாண்டோ பிரிவினர், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில், திடீரென தீவிரவாத தாக்குதல் அல்லது தீவிரவாதிகள் கோவிலுக்குள் நுழைந்தால், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, கோவில் பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.