சபரிமலையில் பழைய முறையில் நெய்யபிஷேகம்: தேவம்போர்டு முறையீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2021 11:12
சபரிமலை: பழைய முறையில் பக்தர்களுக்கு நெய்யபிஷேகம், எட்டு மணி நேரம் பக்தர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததால் தேவசம்போர்டின் வருமானத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை ஓரளவிலாவது சரி கட்ட தேவசம்போர்டு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கினால் மட்டுமே கடைகளில் வியாபரம் நடைபெறும் என்பதால் கடைகள் ஏலம் போகும். அதுபோல பக்தர்கள் மிக பயபக்தியுடன் கொண்டு வரும் முத்திரை தேங்காயை கவுண்டரில் கொடுத்து செல்வது பக்தர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த குறைபாடுகளை களைந்தால் மட்டுமே பக்தர்கள் திருப்தி் அடைவார்கள் என்ற முடிவில் தேவசம்போர்டு உள்ளது. இதன் அடிப்படையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை அரசிடம் வலியுறத்தியுள்ளது. பழைய முறையில் நெய்பிஷேகம், நீலிமலை பாதை வழியாக பயணம், எட்டு மணி நேரம் பக்தர்களை சன்னிதானத்தில் தங்க அனுமதிக்க வேண்டும், பம்பையில் குளிக்க அனுமதிக்க வேண்டும், அறைகள் வாடகைக்கு வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்களை தேவசம்போர்டு எழுத்து பூர்வமாக அரசிடம் வழங்கியுள்ளது. இதன் மீது ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் பக்தர்களை அனமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் தேவசம்போர்டு எந்த முடிவும் எடுக்கவில்லை.