பதிவு செய்த நாள்
03
டிச
2021
02:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், குபேரலிங்க தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் தடையால், குபேர லிங்கம் கோவில் முன் போலீசார் குவிக்கப்பட்டு, பக்தர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலையில், 14 கி.மீ., தொலைவுள்ள கிரிவலப்பாதையில், 7வது லிங்கமான குபேரலிங்கம் உள்ளது. இதை, கார்த்திகை மாத சிவராத்திரியன்று, பிரதோஷ காலத்தில், குபேர பெருமான் கிரிவலம் சென்று தரிசனம் செய்வதாகவும், அந்த நேரத்தில் கிரிவலம் சென்றால், குபேர பெருமானின் தரிசனம் மற்றும் ஆசி கிடைக்கும், செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் குபேர கிரிவலம் மற்றும் குபேர லிங்கம் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்த நிலையில், இந்த ஆண்டு கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. ஆனால், குபேர லிங்க சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கூடாமல் இருக்க நேற்று காலை முதலே போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், குபேர லிங்க கோவிலிற்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சென்றபோது, போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். கிரிவலத்திற்கு குறைந்த அளவிலான பக்தர்களே சென்றனர்.