பதிவு செய்த நாள்
04
டிச
2021
12:12
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மார்கழி மாதத்தில், அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் (பொ) குமரதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் மாதமான மார்கழி, வருகின்ற டிச. 16ம் தேதி துவங்கி அடுத்த மாதம் ஜன. 13ல் (மார்கழி 29) நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூபம், 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4:45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8:45 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6:00 மணிக்கு ராக்கால அபிஷேகம், 6:45 மணிக்கு இராக்கால தீபாராதனை, இரவு 7:30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8:00 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும். முக்கிய விழா நாட்களான டிச. 20ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கோயில் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.