பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
10:07
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் தூண்களில் உள்ள பழமையான வர்ண சிற்பங்களை சீரமைக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் கமலம் பெயின்டிங் பணிகள் நடந்து வரும் நிலையில், பிரகாரத்திலுள்ள தூண்கள், தூண்களுக்கு இடையே உள்ள சுதை சிற்பங்களுக்கு வர்ணம் பூசும், பணியை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கோயில் திருக்கல்யாண மண்டபம், அனுப்பு மண்டபம், சொக்கட்டான் மண்டபம் உள்ளிட்ட பகுதியில் தூண்களில் உள்ள பழமையான புராணச் சிற்பங்கள், சேதுபதி மன்னர்களின் சேதமடைந்த சிற்பங்களை மராமத்து செய்து, வர்ணம் பூசுவதற்கும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இச்சிற்பங்கள் கருங்கல் தூண்களில் செதுக்கப்பட்டு, அதன் மேல் சுண்ணாம்பு கலவை கொண்டு பூசப்பட்டு சுதை சிற்பங்களாக விளங்கி வருகிறது. இச்சிற்பங்கள் சிறிது, சிறிதாக சேதமடைந்து, கலை இழந்து காணப்படும் நிலையில், இதற்கு புதுப்பொழிவு கொடுக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேதமடைந்த சிற்பங்கள் அனைத்தும் சுணணாம்பு மற்றும் சிமென்ட் கலவை கொண்டு மராமத்து செய்து, வர்ணம் பூசும் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது.