பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலில் பூமிக்கடியில் உள்ள, பாதாள அறைகளில், "ஏ அறை நேற்று காலை திறக்கப்பட்டது. அதிலுள்ள தங்க, வைர, ரத்தின, வைடூரிய நகைகள் குறித்தான மதிப்பீடு பணிகள் துவங்கின. இப்பணிகள் முடிவடைய பல மாதங்கள் ஆகலாம். கேரளா, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பூமிக்கடியில் ஆறு அறைகளில், பல நூற்றாண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, ரத்தின, வைடூரிய பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, தேசிய அருங்காட்சியக இயக்குனர் வேலாயுதன் நாயர் தலைமையில் மதிப்பீடு குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பாதாள அறைகளைத் திறந்து அவற்றிலுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், "எப், "இ, "டி, "சி அறைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு, அவற்றிலுள்ள பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு விட்டன. ஆனால், வைர, வைடூரிய நகைகளை மதிப்பீடு செய்வதற்கான வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள், மதிப்பீட்டுக் குழுவினரிடம் இல்லாததால், "ஏ அறை திறக்கப்படாமல் இருந்தது.
வல்லுனர்கள் வரவழைப்பு: இந்த அறையில் தங்க, வைர, வைடூரிய, ரத்தின பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு, தோராயமாக 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, பல ஆண்டுகளாக கருதப்பட்டு வருகிறது. இந்த அறையில், பத்மநாப சுவாமி பூஜைக்கு பயன்படும் 300க்கும் மேற்பட்ட தங்கக் குடங்கள், 3,000க்கும் மேற்பட்ட இரட்டை வடம் மற்றும் அதற்கும் மேற்பட்ட வடங்களைக் கொண்ட தங்கச் சங்கிலிகள், வைர, வைடூரியம் பதிக்கப்பட்ட தங்க மாலைகள், தலா 25 கிலோ எடை கொண்ட தங்கத்திலான பெரிய உருளிகள் என, பல விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நவீன கருவிகள்: தற்போது அந்த அறையைத் திறந்து, அவற்றிலுள்ள பொருட்களை மதிப்பீடு செய்வதற்கான, ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பக் கருவிகள், வல்லுனர்கள், கோவிலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். "ஏ அறையில் உள்ள பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்தவுடன், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் அவை குறித்த அனைத்து விவரங்களும், இஸ்ரோ தயாரித்து அளித்துள்ள கணினியில் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்படும்.
ஏ அறை திறப்பு: இந்நிலையில், நேற்று காலை, மதிப்பீடு குழு தலைவர் வேலாயுதன் நாயர், மேற்பார்வை குழு தலைவர் நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வல்லுனர் குழு, "ஏ அறையைத் திறந்தது. இரும்பு கம்பிகளால் ஆன இரண்டு கதவுகள், தொடர்ந்து, உருக்கு கம்பிகளால் ஆன கதவு ஆகியவை திறக்கப்பட்டு, மதிப்பீடு குழுவினர் அறைக்குள் சென்றனர். தொடர்ந்து அதிநவீன மதிப்பீட்டு கருவிகளைப் பயன்படுத்தி, பொக்கிஷ மதிப்பீடு பணி துவங்கியது. இந்த பணிகள் முடிவடைய பல மாதங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்குள்ள "பி அறை, உச்சநீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகே திறந்து மதிப்பீடு பணி துவங்கும்.