ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி; சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2021 05:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகள், ஆழ்வார்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபால விலாசத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அப்போது 108 போர்வைகள் சாற்றபட்டு சிறப்பு பூஜைகளை ரகுராம பட்டர் செய்தார். இதனையடுத்து பாலமுகுந்தனின் அரையர் சேவை நடந்தது. வேதபிரான் சுதர்சன்பட்டர் கைசிக புராணம் வாசித்தார். நேற்று அதிகாலை வரை நடந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோ மற்றும் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.