பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
ஈரோடு: ஈரோடு சூளையில் மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஈரோடு பெரிய சேமூர் மண்டலத்துக்குட்பட்ட, சூளையில், விநாயகர், முனீஸ்வரர், கன்னிமார், கருப்பணசாமி, மதுரை வீரன் கோவிலுக்கான திருப்பணிகள் முடிவடைந்து, நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, ஜூலை, 3ம் தேதி காலை, 5.45க்கு கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், ஆக்ஸி சங்கிரஹனம், 9 மணிக்கு காவேரி தீர்த்தம் எடுத்து வருதல், மாலை, 5 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, முதற்கால யாக பூஜை, அக்னிகார்யம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், விநாயகர் வழிபாடு, கோபுர கலசம் வைத்தல், பூத சோதனம், மண்டப பூஜை நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி, காலை, 7 மணிக்கு நான்காம்கால யாகபூஜை, விநாயகர் வழிபாடு, மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து, விநாயகர்,முனீஸ்வரர், கன்னிமார், கருப்பணசாமி, மதுரைவீரனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.