ஆழ்வார்திருநகரி: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் கைசிக ஏகாதசி கருடசேவை நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு உடையவர் மணவாள மாமுனிகள், கூரத்தாழ்வார் போன்ற ஆச்சார்யர்கள் கோயிலுக்கு எழுந்தருளினர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கைசிக புராண வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரகவி பரம்பரையை சார்ந்த அண்ணாவியார் பாலாஜி கைசிக புராணம் வாசித்தார். காலையில் நடைபெற்ற வழிபாடுகளைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும், பொலிந்துநின்றபிரான் கருட வாகனத்திலும் மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி அஜீத், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.