பதிவு செய்த நாள்
17
டிச
2021
11:12
அன்னூர்: அன்னூர், மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், அன்னூரில் மேற்றழை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 7:45 மணிக்கு, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளினார். காலை 10:30 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது. உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்டளைதாரர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முன்னதாக சப்பரத்தில் சூலமும், இதையடுத்து சிறிய தேரில் விநாயகரும் வந்தன. இதையடுத்து அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் அமர்ந்த பெரிய தேர் உலா வந்தது. தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக மதியம் 2:45 மணிக்கு மீண்டும் கோவிலை அடைந்தது. தேர் மீது பக்தர்கள் பழங்களை வீசி வழிபட்டனர். தேரோட்டத்தில் ஜமாப் இசை குழுவும், சிவ வாத்திய குழுவும் இசைத்தபடி சென்றன. பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம் வழங்கினர். பல ஆயிரம் பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு, இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. கைகளில் சேனிடைசர் தெளிக்கப்பட்டது.