சேதமடைந்த நிலையில் கீழக்கரை சித்தி விநாயகர் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2021 01:12
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்புறம், வள்ளல் சீதக்காதி சாலையில் பழமையான நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயிலில் முகப்பு பகுதி கடந்த 1948 ல் கட்டப்பட்ட கட்டுமானம் ஆகும். அதன் அருகே உள்ள அர்த்த மண்டபம், வெளிப் பிரகார மண்டபம் சேதமடைந்த நிலையில் மேற்கூரை பூச்சு சிதிலமடைந்து உதிர்ந்து வருகிறது. கீழக்கரையை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது; பழமை வாய்ந்த நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயிலில் மேற்கூரை பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்வதற்கு இடையூறாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் கட்டடம் மேலும் பழுதடைந்து உள்ளது. எனவே இந்து சமயஅறநிலை துறையின் கண்காணிப்பில் உள்ள இக்கோயிலில் இதுவரை எவ்வித மராமத்துப் பணிகளும் செய்யாமல் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் கட்டடம் இடிபாடுகளுடன் விபத்து அபாயம் நிலவும். நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் ஐயப்ப பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். எனவே இந்து சமய அறநிலையத் துறையினர் நிதி ஒதுக்கீடு செய்து, புதியதாக மராமத்து பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.