சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மழை வேண்டி துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. சங்கராபுரம் பகுதியில் மழை இல்லாமல் குடிநீருக்காக மக்கள் கடந்த சில மாதங்களாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏரி, குளங்கள் வற்றியதால் சாகுபடி செய்த பயிர்களுக்கு தண்ணீர் இறைக்க முடியாததால் பயிர்கள் காய்ந்து கருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வேண்டி சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் துர்க்கை அம்மன் கோவிலில் பாண்டலம் நாட்டார் ராமலிங்கம் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேக ஆராதனைகள் ரவி குருக்கள் நடத்தி வைத்தார். மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.