நாமக்கல்: மாசி பெரியசாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் மற்றும் சாலை வசதி செய்வதற்காக, கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து, 27.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் அடுத்த எருமப்பட்டி யூனியன், முத்துகாப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரசித்தி பெற்ற மாசி பெரியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இதுவரை செய்து தரப்படவில்லை. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்துக்கு வந்தது. கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து, 27.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், கோவிலுக்கு செல்லும் சாலை தார் சாலையாக மாற்றம் செய்யப்பட்டு, அருகில் உள்ள ஓடையில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு, சாலை வெள்ளத்தால் பாதிக்காத வகையில் அமைக்கப்படும். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர் வசதி, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.