பதிவு செய்த நாள்
09
ஜூலை
2012
11:07
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷிமலையடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ காகன்னைஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது. பிரசித்திப்பெற்ற எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் ரூ. 75 லட்சம் செலவில் புதிதாக ஸ்ரீ காகன்னைஈஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா காலை 9.30 மணியளவில் நடந்தது.விழாவையொட்டி 6ம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மாலை 5 மணியளவில் முதல் மற்றும் 2ம் யாகசாலை பூஜையும், தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. 7ம் தேதி காலை 5மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணியளவில் 4ம் கால யாகசாலைபூஜையும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 9 மணியளவில் கோபுர கலச கும்பாபிஷேகமும், 9.30 மணியளவில் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திரதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் செந்தில், திரைப்பட இயக்குநர் யார்க்கண்ணன், திட்டக்குடி ராஜன் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். விழா முன்னிட்டு இரவு கங்கை அமரனின் இசைச்சேரி நடந்தது. விழா ஏற்பாடுகளை மகாசித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் அன்னை ராஜ்குமார் சுவாமிகள், இயக்குநர் ரோகினி மற்றும் குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தில் எளம்பலூர், பெரம்பலூர், துறைமங்கலம், எம்.ஜி.ஆர்., நகர், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், சமத்துவபுரம், தண்ணீர் பந்தல், இந்திரா நகர், திடீர் குப்பம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி அருள் பெற்றனர்.