பதிவு செய்த நாள்
15
ஜன
2022
06:01
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே உள்ள தடாகம்புதூர் சக்தி சித்த செல்வ விநாயகர் திருக்கோயிலில், மூன்றாம் ஆண்டு மார்கழி மாத பூஜை மற்றும் ஆண்டாள் தாயார் கிருஷ்ணர் திருக்கல்யாண விழா நடந்தது.
இக்கோவிலில், மார்கழி மாதம் முழுவதும் தினசரி காலை, 5:00 மணிக்கு சுப்ரபாதம் மற்றும் பஜனையுடன் திருவீதி உலா தொடர்ந்து, ஆண்டாள் திருப்பாவை பாடுதல், பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதைத்தொடர்ந்து பொங்கல் திருநாளில் காலை, 8:00 மணிக்கு சூரிய பொங்கல், மதியம் ஜமாப் தொடர்ந்து, மாப்பிள்ளை, பெண் அழைக்க மேளதாளம் மற்றும் தீர்த்தத்துடன் புறப்பாடு, மதியம் தண்ணீர் பந்தல் ஸ்ரீ மச்சாவதார பெருமாள் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு, மகாலட்சுமி அம்மன் திருக்கோவிலில் தாம்பூலம் மாற்றுதல் மற்றும் பெண் அழைப்பு நடந்தது. தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு கோவிந்தா நாமத்துடன் ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் மற்றும் மாலை மாற்றும் சுப நிகழ்வு நடந்தது. இரவு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.