பழநி,: பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் நாளை பக்தர்கள் அனுமதி இன்றி சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
பழநி, தைப்பூசத் திருவிழா, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி கோயிலில் ஜன.12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஆறாம் நாளான நாளை (ஜன.17) முக்கிய நிகழ்ச்சியான வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி, திருக்கல்யாணம் மாலை 5:00 மணிக்கு மேல் மாலை 5:50 மணிக்குள் மிதுன லக்கினத்தில் நடைபெற உள்ளது. வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏழாம் நாளான ஜன.,18 ல் மாலை சிறு மரதேரில் சுவாமி கோயிலில் வலம் வருவார். இந்நிகழ்ச்சியில் கோவிட்-19 பரவல் கட்டுபாடுகளின் படி பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. திருவிழாவில் அனைத்து நாட்களிலும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். பத்தாம் நாளான ஜன.21ல் மாலை 7:00 மணிக்கு தெப்பத்தேர் நடைபெற்று, இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.