பதிவு செய்த நாள்
16
ஜன
2022
06:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில், மாட்டுப் பொங்கல் விழா, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் கோமாளி ரங்கன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வணங்கினர். இங்குள்ள காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த கோமாளி ரங்கநாதன் கோவில் உள்ளது. சுற்றிலும் மிகப் பெரிய ஆலமரங்கள் சூழ்ந்திருக்கும் இக்கோவிலானது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோய்களால் பாதிக்கப்பட்டால், கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தீர வேண்டும் என, கோமாளி ரங்கனை வேண்டிக் கொள்வர். தங்கள் குறை தீர்ந்ததும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை போன்ற உருவங்களை மண்ணினால் செய்து, பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம். ஆண்டுதோறும், மாட்டுப் பொங்கல் தினத்தன்று இக்கோயிலில் வெகுவிமர்சையாக மாட்டு பொங்கல் விழா நடக்கும். தற்போது, தொற்று காலமானதால், எளிய முறையில் இக்கோவிலில் விழா நடந்தது. காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, குருக்கம்பாளையம் பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. மதியம் ஒரு மணி அளவில் உச்சிகால பூஜையும், அன்னதானமும் நடந்தன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த பசு உருவங்களுக்கு, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாய மாட்டுப் பண்ணையில் நடந்த விழாவில், பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பட்டிப்பொங்கல் எனப்படும் பன்னீர், குங்குமம், பால், தயிர், மஞ்சள், கோமியம் உள்ளிட்ட ஒன்பது வகையான வாசனை திரவியங்கள் நிரப்பிய பாத்தியில், அலங்கரிக்கப்பட்ட பசுக்களையும், காளைகளையும் மன்னம் மிதிக்க வைத்தனர். வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் மாடுகளுக்கு பொங்கல் மற்றும் அகத்திக்கீரை ஊட்டினார். நிகழ்ச்சியில், வித்யாலயா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பண்ணைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பன்னீர்மடையில் உள்ள கிருஷ்ணசாமி திருக்கோவிலும், மாடுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதே போல துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர், தங்களுடைய கால்நடைகளை தூய்மைப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி வணங்கி, வழிபட்டனர்.