பல்லடம்: காமநாயக்கன்பாளையம் பெருமாள் கோவிலில், மார்கழி மாத நிறைவு விழாவை முன்னிட்டு, சிறுவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
பல்லடம் அடுத்த, காமநாயககன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி, மற்றும் மார்கழி மாத நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு, சிறுவர் சிறுமியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்டாள், மற்றும் கிருஷ்ணர் வேடம் அணிந்தபடி பங்கேற்ற சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. திருப்பாவை திருவெம்பாவை ஒப்புவித்தல், பாகவத கதைகள், வினாடி வினா நிகழ்ச்சி உள்ளிட்டவை நடந்தன. மதுரை காயத்ரி நாராயணா சபா நிறுவனர் கவிஞர் கூடல் ராகவன், பங்கேற்ற சிறுவர் சிறுமியருக்கு பரிசுகள் சான்றுகள் வழங்கினார். கோவில் அறங்காவலர் வெங்கடாசல ராமானுஜ தாசன் முன்னிலை வகித்தார். 3 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். அனைவருக்கும் திருப்பாவை பயிற்சி வழங்கப்பட்டது.